யாழ்ப்பாணத்தின் நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் போதைப் பொருள் பாவனை. சமூக சீர்கேட்டு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவரும் நிலையில் இரண்டு தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளை மிக மோசமாக தாக்கி சித்திரவதை செய்த சம்பவங்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது .


இது குறித்து மேலும் தெரியவருவதாவது , நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றுமுன்தினம் தந்தை ஒருவர் தன்னுடைய 6 வயது . 10 வயதுடைய பிள்ளைகள் மற்றும் மனைவி மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் 10 வயது பிள்ளையின் காலில் கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் தலைகீழாக கட்டி இறக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .


சம்பவத்தின் பின்னர் குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறியதும் அயலவர்கள் இணைந்து குறித்த பிள்ளையை கிணற்றிலிருந்து மீட்டதுடன் தாய் . பிள்ளைகளை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.


இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் , குறித்த நபர் முதல் நாள் இரவு போதையில் வந்ததாகவும் மறுநாள் வீட்டில் இருந்த 400 ரூபாய் பணத்தினைக் காணவில்லை என்று தெரிவித்தே மனைவி மீதும் பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது . தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.