சிறிலங்காவில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை ஜீலை மாதம் 2ம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரதுறையின் உயர்மட்டம் அரசாங்கத்திடம் பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளனர்.


குறித்த பரிந்துரையை அரசாங்கம் தீவிரமான பரிசீலனைக்கு எடுத்திருக்கின்றது. முன்னதாக நாளை 14ம் திகதி அதிகாலையில் பயணத்தடை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனாலும் சுகாதாரதுறையின் மிக கடுமையான அழுத்தம் காரணமாக 21ம் திகதிவரை நீடிக்கும் தீர்மானத்தினை அரசாங்கம் எடுத்திருந்தது.இந்நிலையில் வார இறுதியில பொஷன் நிகழ்வும் வரவுள்ளதால் மக்களின் நடமாட்டம் அதிகரிக்கலாம் என கருதும் சுகாதார பிரிவினர்பயணத் தடையை ஜீலை 2ம் திகதிவரை நீடிக்குமாறு பரிந்துரை ஒன்றை வழங்கியிருக்கின்றனர்.


இந்த பரிந்துரையை தீவிரமாக அரசு பரிசீலனை செய்துள்ளபோதும்,நாட்டின் பொருளாதாரம் மற்றும் இதர விளைவுகள் குறித்து சிந்திக்கும் அரசு கட்டுப்பாடுகளுடன் பயணத்தடையை தளர்த்தலாமா? என்பதையும் ஆராய்கிறது.எவ்வாறாயிலும் எதிர்வரும் 21ம் திகதியுடன் பயணத்தடையை நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அரசு மற்றும் பாதுகாப்பு தரப்பின் எதிர்பார்ப்பாகவுள்ளது.​